தமிழ் பெண் நீதிபதி
பதிந்தவர் tamilmuslim மேல் ஜூலை 26, 2008
நியூயார்க்: ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் பெண் நீதிபதி நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் தாண்டி இந்தப் பதவிக்கு இவர் வந்துள்ளார்.
67 வயதாகும் நவநீதம் பிள்ளை ஏழை தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை பஸ் டிரைவராக இருந்தார். நிறவெறி தலைவிரித்தாடியபோது அதற்கு இலக்காகி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர் பிள்ளை.
மிகுந்த வறுமை, நிறவெறிக் கொடுமைக்கு மத்தியிலும் சிறப்பாக படித்து சட்டப் படிப்பை முடித்தார் பிள்ளை. தென் ஆப்பிரிக்காவின் நேடால் மாகாணத்திலேயே முதல் முறையாக வழக்கறிஞரான பெண் என்ற பெருமையும் பிள்ளைக்கு உள்ளது. 1968ம் ஆண்டு வக்கீலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இனவெறி கொடுமைகளுக்கு எதிராக போராடினார். அதுதொடர்பான வழக்குகளில் ஆஜரானவர். முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆதரவாகவும் அரசியல் வழக்குகளில் ஆஜராகிய பெருமைக்குரியவர் பிள்ளை.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பெருமைக்குரிய பிள்ளை, 2003ம் ஆண்டு ஹேக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அங்குதான் நீதிபதியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அதற்கு முன்பு 1995ம் ஆண்டு ருவாண்டாவுக்கான சர்வதேச கிரிமினல் டிரிப்யூனலிலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளாளார் பிள்ளை.
தற்போது ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவராக இருக்கும் கனடாவின் லூயிஸ் ஆர்பரின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் பிள்ளை அப்பொறுப்பை ஏற்பார்.
பிள்ளையின் நியமனத்திற்கு ஆரம்பத்தில் அமெரிக்கா கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அவரது நியமனத்தை கடுமையாகவும் எதிர்த்தது. ஜிம்பாப்வேக்கு ஆதரவான பிள்ளையின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த எதிர்ப்பை தெரிவித்தது அமெரிக்கா. இருப்பினும் அதை நிராகரித்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பிள்ளையை இந்த உயர் பதவிக்கு நியமனம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
192 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில் பிள்ளையின் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பின்னர் நான்கு ஆண்டு காலத்திற்கு இப்பதவியை வகிப்பார் பிள்ளை